×

மதசார்பற்ற ஆட்சி அமைய வாக்களியுங்கள் அவிநாசியில் ஆ.ராசா தேர்தல் பிரசாரம்

அவிநாசி,ஏப்.16: மத்தியில் மத சார்பற்ற ஆட்சி அமைய திமுக வேட்பாளரான எனக்கு வாக்களியுங்கள் என நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா அவிநாசியில் நேற்று பிரசாரம் செய்தார்.  மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா அவிநாசி வட்டாரத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அவிநாசி ஒன்றியம் ராமநாதபுரம், முறியாண்டாம்பாளையம், வேட்டுவபாளையம், சேவூர் கைகாட்டி, ராமியம்பாளையம், சின்னேரிபாளையம், ராயன்பாளையம், கருமாபாளையம், உப்பிலிபாளையம், பனப்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம், அனைப்புதூர், பேரூராட்சிக்கு உட்பட்ட ராயன்பாளையம், முத்துசெட்டிபாளையம், சீனிவாசபுரம், ராஜன்நகர், சேவூர் ரோடு, சூளை, அவிநாசி கோவில் தேரோடு வீதிகளிலும், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கிழக்கு ரத வீதி, சிந்தாமணி, வ.உ.சி.திடல், மடத்துப்பாளையம்ரோடு உள்ளிட்ட அவிநாசி தொகுதியில் பல்வேறு ஊர்களில் நேற்று ஆ.ராசா பிரசாரம் செய்தார். அவிநாசி தாலூகா அலுவலகம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆ.ராசா பேசியதாவது:

நீலகிரி தொகுதியில் 2009.ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகாலம் உங்களாலே தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தபோது, தொகுதி மக்கள் என்னை சந்திப்பதில் இடையூறு தொல்லை இருக்க கூடாது என்பதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு அலுவலகமும் சமவெளி பகுதிகளில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் மேட்டுப்பாளையத்தில் ஒரு அலுவலகமும் திறந்து நாள்தோறும் மக்களின் பிரச்னைகளை கேட்டு, உடனுக்குடன் முடித்து வைத்திருக்கிறேன். எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். உங்களின் நம்பிக்கைக்கு உரிய நாடாளுமன்ற உறுப்பினராக, நாணயமுள்ள உறுப்பினராக நான் இருப்பேன் என்கிற உறுதியை உத்திரவாத்தை உங்களுக்கு வழங்குகின்றேன். மத்தியிலே மதவாத ஆட்சி. நடக்கிறது.

 அந்த ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு ராகுல்காந்தி தலைமையிலே மதசார்பற்ற ஆட்சி அமைவதற்கும், மாநிலத்திலே நடைபெறுகின்ற ஊழல் ஆட்சியான எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு விரைவில், முக.ஸ்டாலின் தலைமையிலே நல்லாட்சி வருவதற்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். மத்திய மாநில அரசுகளை மாற்றி, ஒருவளமான பாரதத்தை, வலிமையான தமிழ்நாட்டை பெறுவதற்கு உதவியாக இருங்கள். இவ்வாறு நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா பேசினார்.  வாக்கு சேகரித்த அனைத்து இடங்களிலும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பிரசாரத்தின்போது, மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ், சட்டமன்ற பொறுப்பாளர் கோகுல், கொமதேக. மாவட்ட செயலாளர் லோகநாதன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சாமிநாதன்,  பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் பழனிசாமி, சிவபிரகாஷ், வெங்கடாசலம், நகர திமுக செயலாளர்கள் பொன்னுசாமி(அவிநாசி), பாரதி(பூண்டி) உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

Tags : election campaign ,Avinashi ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...